சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடல் இரண்டிலும் காற்றழுத்தங்கள் சமமாக உருவாகி ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக மா றியுள்ளது. இதனால், தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
மற்ற மாவட்டங்களில் முறையே மிக கன மழை, கனமழை என்று பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வடக்கு நோக்கி ஆந்திர கடல் பகுதிக்கு சென்றது. தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அரபிக்கடலில் தொடர்ந்து நிலவி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஆந்திர கடற்கரை, மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இதுவரையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 3 மி.மீ., அதிகமாக 130 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்து காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கலில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குப்பனாம்பட்டி - 7செ.மீ., முண்டியம்பாக்கம் - 6 செ.மீ., உசிலம்பட்டி- 5 செ.மீ, அருப்புக்கோட்டை, ஏற்காடு-4செ.மீ., தளி (கிருஷ்ணகிரி), தேவாலா (நீலகிரி)-3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.