3ம் வகுப்பு படிக்கும் சிறுவன் இதயவால்வில் பாதிப்பு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே வடக்குத்தோப்பு கிராமத்தை சேர்ந்த வர் அரிராமர் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலலிதா (33). இவர்களுக்கு புவனேஸ்வரன் (8), புதியவன் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர்.இதில் புவனேஸ்வரன் வடக்குத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறான்.. இவரின் தாயார் ஜெயலலிதா அதே பள்ளியில் சத்துணவு சமையல் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

சாதாரண குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மகன்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியோடு தங்கள் கவலைகளை மறந்து உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1 ம் தேதி புவனேஸ்வரனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவனை மன்னார்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அங்கு மருத்துவரின் பரிசோதனையில் சிறுவனுக்கு இதய துடிப்பு அதிகமாக இருந்ததால் அந்த துறையை சேர்ந்த மருத்துவரை பார்க்குமாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார். உடனடியாக இதய மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதித்ததில் சிறுவனின் இதயத் தின் வால்வு ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளதால் விரைவாக அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையை அணுகி அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து அங்கு கொண்டு சென்றனர். அந்த தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சுமார் 4 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளனர்.

போதிய பணம் இல்லாததால் சிறுவனை அவனின் பெற்றோர் ஊருக்கு அழைத்து கொண்டு வந்து விட்ட னர். கடந்த 20 நாட்களாக சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும், மீதம் ரூ.2 லட்சத்திற்கு வழியின்றி சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் அவனின் குடும்பம் தவிப்பதாக,சிறுவன் படிக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வடுவூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சிறுவனின் நிலைகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தற்போது வைராலகியுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வறிய குடும்ப சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் உற்சாகத்தோடு இயல்பாய் பள்ளி சென்று கொண்டிருந்த புவனேஸ்வரனுக்கு இதயத்தின் வால்வு ஒன்றில் பழுது ஏற்பட்டது அந்த எளிய குடும்பத்தை நிலைகுலைய செய்து விட்டது.

அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவர்கள், ஜிப்மர் மற்றும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை வரை சிகிச்சைக்காக சென்று தங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளையை கொண்டு காட்டியிருக்கிறார்கள்.சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் சிறுவனின் பெற்றோர்கள் செய்வதறியாது நிற்கதியாய் நிற்கின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவனின் நிலை அறிந்த சில சேவை சங்கங்கள் தங்களால் ஆன உதவிகளை செய்ய முன் வந்துள்ளன. இருப்பினும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறுவன் குடும்பத்தின் வறிய நிலையை கருத்தில் கொண்டு ஏதேனும் உதவிகளை செய்து அறுவை சிகிச்சை நடக்க உதவிட முன்வர வேண்டும். என கூறினர்.

Related Stories: