ராமேஸ்வரம் கோயில் நீர்த்தேக்கத்தில் டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்: மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் நீர்த்தேக்கத்தில் நேற்று டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் கோதண்டராமர் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து விட்டு திரும்பும். இந்த நீர்த்தேக்கத்தில் வளரும் மீன்கள், மீன்வளத்துறையினரால் அனுமதி பெற்ற மீனவர்களால் பிடித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோதண்டராமர் நீர்த்தேக்கத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது. கோதண்டராமர் கோயில் கடல் பகுதியில் இருந்து, கடலோர ஓடை வழியாக அதிகளவில் கொய் மீன் உட்பட பலவகை மீன்கள் நீர்த்தேக்க பகுதிக்குள் வந்துவிட்டது. இதனால் இந்த ஆண்டு அதிகளவில் மீன்கள் பிடிக்கலாம் என்று மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

நேற்று கோதண்டராமர் கோயில் நீர்த்தேக்கப்ப்குதியில் ஆயிரக்கணக்கில் கொய் மீன்கள் செத்து மிதந்தன. நேற்று நீர்த்தேக்கத்தை பார்வையிட வந்த மீனவர்கள் கொய்மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

குறைந்த ஆழம் கொண்ட நீர்த்தேக்கத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தினால், மீன்கள் கொத்து கொத்தாக செத்திருக்கலாம் என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் இதனை பிளாஸ்டிக் பெட்டிகளில் சேகரித்து கருவாடாக மாற்றுவதற்காக வேன் மூலம் கொண்டு சென்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் மீனவர்கள் புகார் செய்துள்ளனர்.

Related Stories: