சயனைடு கொடுத்து 6 பேர் கொலை மாந்திரீகம் செய்த கொலைகாரி ஜோளி: செல்வம் செழிக்க நரபலி? போலீஸ் விசாரணை

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில்  கணவர்,  மாமனார், மாமியார் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு  கொடுத்து கொன்ற  ஜோளிமாந்திரீகம் செய்து வந்த தகவல் கிடைத்துள்ளது. கேரள  மாநிலம் கோழிக்கோடு அருகே  கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது  மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உள்பட்ட கால கட்டத்தில் தனது கணவர் ராய்  தாமஸ், அவரது தந்தை டோம் தாமஸ், தாய் அன்னம்மா உள்பட 6 பேர் அடுத்தடுத்து   கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் ஜோளி,  அவரது உறவினர் மேத்யூ, நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேரை கைது  செய்தனர். இவர்களை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரித்த  போலீசார், அவர்களை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோளி சாத்தான் பூஜை என்ற   துர்மந்திரவாத பூஜை நடத்தி வந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.  இவர் கடந்த 14 வருடங்களாக கோழிக்கோடு என்ஐடியில் பணிபுரிந்து வருவதாக கூறி   வந்துள்ளார்.  தினமும் வீட்டில் இருந்து கார் அல்லது ஸ்கூட்டரில்  வேலைக்கு  செல்வதாக கூறி  செல்வார். பின்னர் மாலை அல்லது இரவு தான்  திரும்புவார். என்ஐடி செல்வதாக  கூறி செல்பவர் கோழிக்கோடு மற்றும்  கட்டப்பனையில் நடந்து வந்த  சாத்தான் பூஜை  என்ற துர்மந்திரவாத பூஜையில்  பங்கேற்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. கட்டப்பனையில்  கிருஷ்ணகுமார் என்ற ஜோதிடரிடம் சென்று வந்துள்ளார்.

கேரளாவில்  கோழிக்கோடு  மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாத்தான் பூஜைகள் நடந்து  வருகின்றன. இதில் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பூஜையில்   கலந்துகொண்டால் செல்வம் கொழிக்கும் என்று பலரும்  நம்புகின்றனர். இந்த  பூஜையில் நரபலியும் ஒரு அம்சமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்காகத்தான்  ஜோளி 6 பேரையும்  கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. சாத்தான் பூஜைக்கு பெண் குழந்தைகளை கொன்றால்  செல்வம்  கொழிக்கும் என்று கூறியதன் அடிப்படையில் இவர் பெண் குழந்தைகளை குறி வைத்திருந்தார். இதன்படி தான் தனது 2வது கணவரின் குழந்தை  ஆல்பைனை கொன்றுள்ளார். இதேபோல் மேலும் சிலரையும் கொல்ல   திட்டமிட்டிருந்ததாக  கூறப்படுகிறது.

Related Stories: