அரக்கோணத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் சாலை மறியல்

அரக்கோணம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரக்கோணம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் அடுத்த மெட்டபட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தலைமை ஆசிரியர் மற்றும்  ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். நடப்பாண்டில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்ற முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் ஒரு ஆசிரியர் மட்டுமே செயல்பட்டு வருவதால் தங்கள் மாணவர்களின் பிடிப்பு கேள்விக் குறியாகியுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வியில் குழந்தைகள் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை வட்டார கல்வி அதிகாரிகளிடம் புகார் மனுக்களை பலமுறை அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவிலை. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அரக்கோணம் - வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர், வட்டார கல்வி அலுவலர்கள் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்த பிறகு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Related Stories: