சேலம்: சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் நடந்த 5,298 சாலை விபத்தில் 951 பேர் பலியாகி உள்ளனர். சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல் செய்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஒரு ரோந்து போலீஸ் வாகனம் கண்காணித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் நிறுத்துவதற்கு என்று தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் லாரி டிரைவர்கள் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியாக வேகமாக வரும் வாகனங்கள் லாரிகள் நிற்பது தெரியாமல் மோதி விடுகின்றன. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று எச்சரிக்கை பலகை இருந்தாலும், அதைப்பற்றி லாரி டிரைவர்கள் கவலைப்படுவதில்லை.சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் 5298 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்த விபத்தில் 951 பேர் பலியாகியுள்ளனர்.