‘நம்பர் ஒன்’ இடத்தை விட்டுத்தர மாட்டோம்: விராட் கோஹ்லி பேட்டி

டெஸ்ட் போட்டிகளில் டிராவுக்காக ஆட மாட்டோம். நம்பர் ஒன் இடத்தை சிறப்பாக ஆடி தக்க வைப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது  கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று துவங்கியது. இது இந்திய அணி கேப்டனாக விராட் கோஹ்லி பங்கேற்கும் 50வது டெஸ்ட் போட்டி. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட்  தொடரை கைப்பற்றி விடும். மேலும், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 11வது வெற்றி என்ற சாதனையும் இந்திய அணியின் வசமாகும்.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு முக்கியம்தான். நான் புள்ளி விபரங்களை கணக்கிடுவதில்லை. டெஸ்ட் போட்டிகளை டிரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிய காலம் முடிந்து விட்டது.  டெஸ்ட் சாம்பியன் ஷிப்புக்காக ஒவ்வொரு போட்டியும் கணக்கிடப்படும். எனவே, நாங்கள் வெற்றிக்காகவே ஆட விரும்புகிறோம். இப்போட்டியிலும் வெற்றியை குறி வைத்தே ஆடுவோம். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை  பெற்றுள்ளோம். இதை விட்டுத்தராமல் சிறப்பாக ஆடி தக்க வைப்போம்’’ என்றார்.

Related Stories: