பாலவாக்கம் கடற்கரையில் ஐ.டி ஊழியரை வெட்டி வழிப்பறி: வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

துரைப்பாக்கம்: பள்ளிக்கரணையை சேர்ந்தவர் முத்துசெல்வம் (26). இவரது நண்பர் கணேஷ் (27). சோழிங்கநல்லூர் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் கடந்த 3ம் தேதி பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த 4 பேர் முத்துசெல்வத்தை கத்தியால் வெட்டி 2 செல்போன், 3 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த முத்துசெல்வம், அதேப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தபோது பாலவாக்கத்தை சேர்ந்த கோபி (எ) கோபாலகிருஷ்ணன் (24) மற்றும் விஜய், ராகவா, ஜெய்கணேஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அக்கரை சோதனை சாவடியில் கோபியை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரிடம் இருந்து 2 செல்போன், 2 கத்தி, 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கோபி மீது, கொலை, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: