சீர்காழி: சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணியால் நிலத்தடி நீர் கருப்பாகி துர்நாற்றம் வீசுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் துரப்பணப் பணியை தொடங்கியுள்ளது. அதனை அடுத்து மெல்ல மெல்ல நிலத்தடி நீரின் தன்மை மாறிவந்ததாக கூறும் மக்கள் தற்போது கை பம்புகளில் வரும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் மாறி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளதாக பழையபாளையம் மக்கள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் தேவை என்றால் 5 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளதாகவும், இதனால் பலர் ஊரை விட்டு சென்று விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.