ஆம்பூர் துத்திபட்டில் புரட்டாசி பெருவிழா : பிந்து மாதவபெருமாள் கோயிலில் நாளை திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத  பிந்து மாதவ பெருமாள் எனும் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி நாளை திருப்பதியில் ஒருநாள் தரிசனம் மற்றும் மூலவருக்கு நவரத்தின அங்கி சேவை நடக்கிறது. பிரதூர்த்தபட்டான இத்தலம் பிரதூர்த்தன் என்ற அரக்கன், ரோமரிஷி மற்றும் இந்திரன் உதவியால் திருமால் தரிசனம் பெற்ற தலமாகும். பராசர முனிவர் மைத்ரேய மகரிஷிக்கு விஷ்ணுபுராணம் எடுத்துரைத்ததும் இத்தலத்தில்தான். ஏகஜெயதேவராயர், விஜய நரசிம்மராயர் உள்பட பல்வேறு அரசர்கள் இந்த கோயிலில் திருப்பணி செய்துள்ளதாக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இத்தலத்தில் வைகாசி விசாக கருட சேவை, கஜேந்திர மோட்சம் என பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது.

இந்த தலத்தில் வைகாசி மாத பிரமோற்சவத்தின்போது அத்தி மரத்தால் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் சுவாமி திருவீதி உலா நடைபெறுவது சிறப்பு. 9ம் ஆண்டாக நாளை புரட்டாசி பெருவிழாவில் மூன்றாம் சனிக்கிழமையொட்டி பெருமாள் அமர்ந்த கோலம், நின்ற கோலம், நடந்த கோலம், கிடந்த கோலம் என பல்வேறு கோலங்களிலும், திருமலை வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தை கொண்ட புகழ்பெற்ற திருப்பதியில் ஒருநாள் தரிசனம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.  நாளை காலை 6 மணிக்கு மூலவருக்கு பூரண புஷ்ப கலை அலங்காரத்துடன் நவரத்தின அங்கி சேவையும், மஞ்சள் குங்குமத்துடன் மகா பிரசாதமும் ஆம்பூர்  மகா விஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை, பிந்து மாதவர் நித்திய பூஜை கமிட்டி மற்றும் துத்திபட்டு ஊர் பொதுமக்கள்  சார்பாக நடைபெற உள்ளது.

Related Stories: