அகமதாபாத்: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று வருகை புரிகிறார். அப்போது இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடமில்லா நாடாக அறிவிக்கிறார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு பிரதமர் மோடி வருகை புரிகிறார். இது குறித்து மாநில பாஜ தலைவர் ஜிது வகானி கூறுகையில், “ மகாத்மாவின் பிறந்த நாளையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மாலை 6 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லும் அவர், மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். அங்கிருந்து சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.