விமர்சனங்களை ஒடுக்குவது தீங்கிழைத்து கொள்வதற்கு சமம்: மத்திய அரசுக்கு ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், அமெரிக்கா சிகாகோ பல்கலை பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது பிளாக் பக்கத்தில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:  அரசின் கொள்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் விமர்சனம் செய்தால், அவற்றை திரும்பப் பெறச் செய்தாலோ அல்லது ஆளும்கட்சியின் அடக்குமுறையாளர்களை கொண்டு அவர்களை குறி வைத்து காய் நகர்த்தினாலோ, பலர் தங்களின்  எதிர்ப்பு குரலை அடக்கிக் கொள்வார்கள். அதன் பின் எதிர்ப்பே இல்லாமல், மகிழ்ச்சியான சூழலில் அரசாங்கத்தை நடத்தலாம். ஆனால், கடினமான உண்மையை நீண்ட காலத்திற்கு மறைக்க முடியாது.

 அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்களை ஒடுக்குவது கொள்கை தவறுகளுக்கு வழி வகுத்து விடும். நியாயமான விமர்சனங்கள் கொள்கை தவறுகளை திருத்திக் கொள்ள உதவும்.  விமர்சனங்களை ஒடுக்கும் அரசுகள், தனக்கு தானே தீங்கிழைத்துக் கொள்வதற்கு சமம் என கூறியுள்ளார். சமீபத்தில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்து ரத்தின் ராய், ஷமிகா ரவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ரத்தின்  ராய், ஷமிகா நீக்கப்பட்ட நிலையில் ரகுமான் ராஜன் இப்படியொரு கட்டுரையை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: