சாயல்குடி: கடலாடி அருகே பிரச்னைக்குரிய அம்மன் கோயிலை திறக்கச் சென்ற தாசில்தார் திடீரென அருள் வந்து சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மேலக்கிடாரத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள உய்வந்தம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறும். கடந்த 2012ல், முதல்மரியாதை பிரச்னை தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பிடம் கிராம வரிவசூல் செய்வதை மற்றொரு தரப்பினர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கோயில் பூட்டப்பட்டது. இதையடுத்து, ஒரு தரப்பினர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தலைமை ஏதும் இல்லாமல் திருவிழா கொண்டாட வேண்டும். கடலாடி தாசில்தார், முதுகுளத்தூர் சரக டிஎஸ்பி முன்னிலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல், கிராம மக்கள் ஒற்றுமையாக இருந்து சாமி கும்பிடவேண்டும் என வலியுறுத்தியது.