புதுடெல்லி: `‘காஷ்மீர் விவகாரத்தில் ஐநா.வை நேரு அணுகியது மிகப் பெரிய இமாலயத் தவறு,’ என்று அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். ‘சங்கல்ப்’ முன்னாள் உறுப்பினர்களின் கூட்டமைப்பு மாநாடு டெல்லியில் உள்ள நேரு நினைவு அரங்கில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: கடந்த 1948ல் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னைக்காக ஐநா.வை அணுகினார். இது இமாலயத்தை விட மிகப்பெரிய தவறு. காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அப்படி கூறுபவர்களின் எண்ணத்தில்தான் தடை உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பல பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக அங்கு சென்று வருகின்றனர்.