மானாமதுரை: மழை பெய்ய வேண்டி மானாமதுரையில் காவல்தெய்வத்திற்கு மண்சட்டியில் கறி விருந்து படையல் படைத்து ஏராளமான பெண்கள் வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் கோயில். மானாமதுரை நகர் காவல்தெய்வமாக இந்த அம்மனுக்கு காப்பு கட்டி சித்திரை திருவிழா நடத்திவிட்டுத்தான் ஆனந்தவல்லி சோமநாதருக்கு சித்திரை திருவிழா துவங்கும். பெண் தெய்வம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் சித்திரை திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் செவ்வாய்சாட்டுதல் விழாவும் நடப்பது வழக்கம். இந்தாண்டு செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 17ல்) துவங்கியது. ஏழாம் நாளான நேற்று முன்தினம் பிடாரியம்மன் கோயிலில் செவ்வாய் வழிபாடு துவங்கியது.