பாலைவனமும் இனி விவசாய பூமியாகும் வளர்ச்சியடையும் புதிய தொழில்நுட்பம்

துபாய்: எதிர்க்காலத்தில் உணவு உற்பத்தி என்பது தற்போதைய நிலையை விட இரட்டிப்பாக இருந்தால் மட்டுமே அனைவருக்குமான உணவு தேவையை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது.ஆனால் இயற்கை சுரண்டப்பட்டு புவி வெப்பமயமாதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்பது எதிர்கால சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்நிலையை மாற்ற‌ விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மண் மற்றும் சூரிய ஒளி இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் முறை விவசாயம், பசுமை குடில்கள் எனப்படும் மேற்கூரை அமைத்து தேவையான தட்பவெட்ப சூழல் உருவாக்கி விவசாயம், வெர்டிக்கல் விவசாயம் என இன்னும் பல்வேறு முறைகளில் விவசாயம் நடைபெறுகிறது.

இதில் தற்போது புதிய‌ வகையாக‌ பாலைவனபகுதியை செழிப்பான வளமான பகுதியாக மாற்றி விவசாயம் செய்யும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது. எல்என்சி லிகுட் நானோ கிளே என்றழைக்கப்படும் இந்த  தொழில் நுட்பத்தில், களிமண்ணையும் நீரையும் இணைப்பதன் மூலம் திரவ நானோக்ளே தயாரிக்கப்படுகிறது. இந்த திரவம் பாலைவனத்தில் குறிப்பிட்ட அளவில் இடம் விட்டு 40 முதல் 60 செமீ ஆழத்தில் பயன்படுத்தப்படுகிறது. தெளிப்பான்கள் மூலம் இவை உபயோகப்படுத் தப்படுகிறது.இந்த கலவை தண்ணீரை கடற்பாசியை போன்று தக்க வைத்து கொள்ளும். இதன் மூலம் பாலைவன பகுதி பயிரிடும் பகுதியாக மாறுகிறது. பொதுவாக பாலைவன மண்ணை வளமான மண்ணாக உருவாக்க 7 முதல் 15 ஆண்டுகள் ஆகும் ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதன் மூலம் வெறும் 7 மணிநேரத்தில் அப்பகுதி பயிரிடுவற்கு ஏற்றதாக மாறும் எனவும், பொதுவாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை விட இந்த புதிய முறைக்கு தண்ணீர் பயன்பாடு பாதியாக இருக்கும் என‌ இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related Stories: