சென்னை: வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் கோவை, தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை பிடித்தது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் தமிழகம் வரவில்லை. இந்த நிலையில் 2வது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி வரும் 30ம் தேதி சென்னை வருகிறார்.