மக்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைத்துள்ளனர்: நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

கோவில்பட்டி: யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் மக்கள் வைத்துள்ளதாக நடிகர் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரம் குறித்தும், அரசியல் சூழல் குறித்தும் பரபரப்பாக பேசினார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற பெண் பொறியாளர் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய விஜய், இந்த விவகாரத்தில், குற்றவாளிகளை விட்டு விட்டு யார் யார் மீதோ பழிபோடப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

எந்த இடத்தில் யாரை வைக்க வேண்டுமோ அங்கே மக்கள் வைக்காததால்தான் இது போன்ற பிரச்னை ஏற்படுவதாகக் விஜய் குறிப்பிட்டார். அதிமுகவை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜய் பேசிய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் வைத்துள்ளதாகக் கூறினார். ஒவ்வொரு விஷயத்திற்கும் விஜயை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய கடம்பூர் ராஜூ, தான் நடித்த படத்தின் விளம்பரத்திற்காகவே விஜய் இவ்வாறு பேசியுள்ளதாகக் விமர்சித்தார். 

Related Stories: