தைபே: சீனாவின் அதிகார பலத்தால், தைவானுடன் தூதரக உறவை மேற்கொண்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. தற்போது, 2 நாடுகள் ஒரே வாரத்தில் விலகி இருக்கின்றன. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும், தைவானின் நிலப்பரப்பு, சீனாவுக்கு சொந்தமானது என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக, தைவானை தனி நாடாக ஒரு சில நாடுகள் மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளன. தைவானில் கடந்த 2016ல் அதிபராக சாய் இங்க் வென் பதவியேற்ற போது, சீனாவுடன் ஒன்றிணைய அந்நாட்டு அதிபர் ஜின்பிங் வேண்டுகோள் விடுத்தார். இதனை சாய் நிராகரித்ததால், தூதரக ரீதியாக தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. பொருளாதார ரீதியாக பலமிக்க சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தைவானை தனிமைப்படுத்தி, அதன் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கிறது.