செங்கம்: ஜவ்வாதுமலையில் பெய்த கனமழை காரணமாக, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 கறவை மாடுகள் பரிதாபமாக பலியாயின. மேலும், 70 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் மழைக்காலங்களில் பல்வேறு இடங்களில் ஊற்றெடுத்து, சிறுசிறு ஓடைகளாக, மலையடிவார கிராமங்களான ஊர் கவுண்டனூர், பன்ரேவ், கிளையூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக அருகில் உள்ள குப்பநத்தம் அணைக்கு சென்று நிரம்பும். இந்நிலையில் ஜவ்வாதுமலை பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலையடிவார கிராமங்களில் ஓடியது. இந்த வெள்ளத்தில் அங்குள்ள விளைநிலங்களுக்கு அருகில் கட்டிவைத்திருந்த மாடுகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன.