சென்னை: செப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழை காக்க அனைவரும் அணிவகுப்போம் என்று மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 17 நமக்கு இரட்டிப்பு பெருமைமிக்க நாள். தந்தை பெரியாரின் பிறந்தநாள். திமுக எனும் சீர்திருத்தப் பேரியக்கத்தை அண்ணா தொடங்கிய நாள். இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும். இந்திதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கக் கூடியது. இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் இந்தக் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும். அதனால்தான், உயர்நிலை செயல்த்திட்டக் கூட்டத்தில், மத்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஒரே தேசம் - ஒரே மொழி - ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் வருவாய் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் செப்டம்பர் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.