ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாவில் உருவான பாசித்திரள் மற்ற பகுதிகளிலும் பரவுவதால் பாம்பன் பாலம் கடல் பகுதியிலும் கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் காட்சியளித்தது. அதிவேகமான நீரோட்டத்தினால் நீர்த்தட்டைகளும் உருவாகி கடலில் வெண்நுரை திட்டுகளாக மிதந்து சென்றது. மன்னார் வளைகுடா கடலில் அமைந்துள்ள குருசடைத்தீவு, சிங்கிலி, பூமரிச்சான் உள்ளிட்ட தீவுகளையொட்டிய கடல் பகுதியில் நீலப்பச்சைப்பாசி இனவிருத்தி சூழல் காரணமாக நேற்று முன்தினம் பாசித்திரள் ஏற்பட்டது. இதனால் தீவுகளையொட்டி பாம்பன் கடல் பகுதி முழுவதும் பாசி படர்ச்சி ஏற்பட்டு கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் மாறியது. இதன் காரணமாக, சுவாசிக்க முடியாமல் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இறந்த மீன்களில் சிலவற்றையும், பச்சை நிறத்தில் காட்சியளித்த கடல்நீரையும் ஆய்வுக்காக சேகரித்துச் சென்றனர். பாசித்திரள் நிகழ்வினால் கடல்நீரில் ஏற்றபட்ட நிறமாற்றம் சில நாட்களில் சரியாகி சகஜநிலைக்கு திரும்பிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.