திருவனந்தபுரம்: தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது) இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரின்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிகா ஏ அணிகளுக்கிடையேயான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி கடந்த 9ம் தேதி துவங்கியது. டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசியது. தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
இதனை தொடர்ந்து 139 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் ஆடத்தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ 186 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் வெறும் 48 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணி கேப்டன் கில் (5), அங்கித் பாவ்னே (6), பாரத் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட் இழந்தனர். இதனை தொடர்ந்து சிவம், இரண்டு சிக்ஸ்கர்களை பறக்க விட்டு வெற்றியை தேடித்தந்தார். சிவம் (12) மற்றும் ரிக்கி (20) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். இதனை தொடர்ந்து முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது) 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.