சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் மருத்துவக் கழிவுகள் வீச்சு

*சுகாதாரத்துறை கவனிக்குமா?

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் மருத்துவக்கழிவுகளை வீசிச்சென்ற மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குட்டி கும்பகோணம் என்றழைக்கப்படும் சேரன்மகாதேவிக்கு பெருமை சேர்ப்பவைகளுள் ஒன்று தாமிரபரணி ஆறு. பாறைகள் இல்லாமலும், சுழல் பகுதி இல்லாமலும் பாதுகாப்பாக குளிப்பதற்கு ஏற்ற இடம் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக குளிக்க உகந்த இடமாகும்.

தாமிரபரணி ஆறு வற்றாத ஜீவ நதியாக மட்டும் இல்லாமல் புண்ணிய நதியாகவும் திகழ்கிறது. ஆற்றுப்பாலத்திற்கு கீழே விரிந்து காணப்படும் மரங்களுக்கு இடையே சென்றால் அடர்ந்த காடுகளுக்குள் சென்ற அனுபவம் ஏற்படும். இங்கு சோலைபோல் காட்சியளிக்கும் மரங்கள் கோடை காலத்திலும் வெயில் விழாத அளவிற்கு குளிர்ச்சி தருகின்றன. ஆற்றுக்கு செல்ல பேருந்து வசதியும் உள்ளதால் விடுமுறை தினங்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இத்தகைய சிறப்புமிக்க சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றின் கரையை ஒட்டி பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் மர்மநபர்கள் அதிக அளவில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர்.

இந்த மருத்துவக் கழிவுகளால் தண்ணீர் மாசுபடுவதுடன் நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாய சூழலும் உள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஆற்றுப்படுகையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: