புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக மட்டுமே இருக்கும்,’’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் டெல்லியில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு வெங்கையா பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். சமீபத்தில், ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நடந்த காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவானதற்கு மகிழ்ச்சி தெரிவித்த வெங்கையா, இனி ஒவ்வொரு 5 ஆண்டும் உள்ளாட்சி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.