பெங்களூரு: விக்ரம் லேண்டரின் சிக்னலை மீட்கும் முயற்சி தொடர்கிறது. சந்திரயான்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி கடந்த 7ம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தரையில் இருந்து 2.1 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் செங்குத்தாக தரையிறங்கிய போது திடீரென இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் லேண்டர் தரை இறங்கியதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே, நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் கேமரா, நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்ட இடத்திற்கு அருகில் லேண்டர் விக்ரம் கிடப்பதை படம் பிடித்து காட்டியது. லேண்டர் நிலவின் பரப்பில் உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ தகவல்கள் தெரிவித்திருந்தன.