வாஷிங்டன்: தலிபான்களுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்ட அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு அவரது கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் காபூலில் கடந்த வாரத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்ற நிலையில் அந்த பயங்கரவாத இயக்கத்துடனான பேச்சுவார்த்தை கைவிடப்படுவதாகவும் அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அதிபர் மாளிகையான கேம்ப் டேவிட்டில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அமெரிக்கர்கள் மீதே தாக்குதல் நடத்தும் தலிபான்களை அமெரிக்க மண்ணுக்கே அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடுவதா என்று டிரம்பிற்கு அவரது சொந்த கட்சியினரே கண்டனம் தெரிவித்துள்ளனர்.