மணிப்பூர்: அசாம் மாநிலத்தை போல தேசிய குடிமக்கள் பதிவேட்டு நடைமுறையை மணிப்பூர் மாநிலத்திலும் கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன்சிங் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அசாம் மாநிலத்தில் வாழும் இந்திய குடிமக்களை கண்டறியவும் வேற்றுநாட்டு குடிமக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களை கண்டறிந்து வெளியேற்றவும் தேசிய பதிவேட்டு நடைமுறை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அசாம் தலைநகர் கௌஹாத்தியில் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திற்குமே தேசிய குடிமக்கள் பதிவேட்டு முறை தேவை என்று தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் மணிப்பூர் முதலமைச்சர் குறிப்பிட்டார்.