ஆதம்பாக்கத்தில் பரபரப்பு மத்திய அரசு அலுவலகத்தில் தீ விபத்து: கடல் உணவு பொருட்கள் நாசம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மீன், இறால் வளர்ப்பு உணவு பொருட்கள் நாசமானது. ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டையில் மத்திய அரசின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அலுவலகம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த  இந்த அலுவலகம்  சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையொட்டி அங்குள்ள தளவாட பொருட்களை லாரிகளில்  கொண்டு செல்லும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. 90 சதவீத பொருட்களை கொண்டு சென்ற நிலையில் நேற்று மீதமுள்ள பொருட்களை லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்த போது மின்கசிவினால் 3வது மாடியில் திடீர் என தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் அறை முழுவதும் ஒரே புகைமூட்டமானது. உடனே அங்கிருந்த  ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். பின்னர் இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் வேளச்சேரி தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில்   மீன் மற்றும் இறால் வளர்ப்பு உணவு பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Related Stories: