சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை : மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. வடபழனி திருநகரை சேர்ந்தவர் விஜயகுமார் (38). வடபழனி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 25.12.2017 அன்று இவர், தனது ஆட்டோவை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெருவில் நிறுத்தி இருந்தார். அப்போது அந்த தெருவில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமியை விஜயகுமார் ஆட்டோவுக்கு தூக்கி சென்று, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதையடுத்து, சிறுமியினர் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வடபழனி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், விஜயகுமார் மீதான குற்றச்சாட்டு, விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 அபராதம் விதிக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.

Related Stories: