வாஷிங்டன்: ‘காஷ்மீர் விவகாரத்தில் தேவையற்ற பேச்சை தவிருங்கள்’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை கடந்த 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை சர்வதேச பிரச்னையாக்க இம்ரான்கான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டன.
காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சு 30 நிமிடங்கள் நீடித்தது. பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமும் தொலைபேசியில் டிரம்ப் பேசினார். அதன்பின் டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இரு நண்பர்களிடமும் தொலைபேசியில் பேசினேன். இந்நாடுகள் உடனான வர்த்தகம், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினேன். குறிப்பாக, காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வலியுறுத்தினேன். தர்மசங்கடமான நிலையிலும், இரு தரப்புடனான தொலைபேசி பேச்சு சிறப்பாக அமைந்தது,’ என்று கூறியுள்ளார்.