மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து புறப்பட்டு சென்ற விமானத்தின் மீது பறவை கூட்டம் மோதியதால், அதன் 2 இன்ஜின்களும் செயல் இழந்தாலும் சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார் பைலட். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவுக்கு நேற்று யூரல் ஏர்லைன்சின் ஏ-321 என்ற விமானம் 226 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானம் மேல் எழும்பிய சில நிமிடங்களில் அதன் மீது கடல் பறவைக் கூட்டம் மோதியது. இதில் விமானத்தின் 2 இன்ஜின்களும் செயல்படாமல் ஸ்தம்பித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பைலட் விமானத்தை உடனடியாக தரையிறக்க இடம் தேடினார். அப்போது, விமான நிலையத்திற்கு அருகே 5 கிமீ தொலைவில் உள்ள மக்காச்சோளம் பயிரிடப்பட்டு இருந்த நிலத்தை கண்டார். விமானத்தை தரையிறக்க சிறிதாக சமமான நிலப்பரப்பு தேவை. அதனால், அந்த இடத்தை தேர்வு செய்து விமானத்தை தரையிறக்கினார்.