ஆடி 28ம் நாளையொட்டி காவிரி தாய்க்கு சீர்கொடுத்த நம்பெருமாள்

திருச்சி: ஆடி 28ம் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18 அல்லது ஆடி 28ம் தேதியன்று நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து காவிரி தாய்க்கு ஆற்றில் மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக சமர்ப்பிப்பார். அதன்படி, நேற்று காலை நம்பெருமாள் கோயில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி 11.30 மணிக்கு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை 4 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின்னர் மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அது சமயம் பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை யானை மீது வைத்து நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டுச் சேலை, பெருமாள் சூட்டிய மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வாிசையாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் அம்மாமண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஏற்பாடுகளை ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: