திருப்பூர்: தொழில்துவங்குவதாக மனைவி மூலம் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றுவிட்டு வேறு பெண்ணுடன் தலைமறைவான கணவனை கண்டுபிடித்து தர கோரி பெண் ஒருவர் நேற்று திருப்பூர் போலீஸ் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். திருப்பூரை அடுத்த ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் அன்னபூரணி (41), இவரது கணவர் செந்தில்குமார் (47). இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டாகிறது. இந்நிலையில், செந்தில்குமார் புதிதாக தொழில் துவங்குவதாக மனைவி அன்னபூரணியிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அவர், சுய உதவி குழுக்கள், தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த மீனாகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த வாரம் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே கடன் கொடுத்தவர்கள், அன்னபூரணியிடம் பணத்தை திரும்ப கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி வருவதாக கூறப்படுகிறது.