திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரேநாளில் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தியதாக சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.துபாயில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளவில் ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் வந்தது. பயணிகள் சோதனையில் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா பகுதியை சேர்ந்த அஸ்ரப் ஷேக்கிடம் 232 கிராம் தங்கம் இருந்தது. சிறிய ரக அடுப்பில் (ஸ்டவ்) தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். தொடர்ந்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் ஷார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த ராஜா முகமது 700 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவிலாக்கி அதை டியூப் மாத்திரைக்கு பயன்படுத்தும் கேப்சூல்களில் அடைத்து ஆசனவாயில் பதுக்கி வைத்து இருந்தார். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ேமலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கத்தை கடத்திய வர்க்கலாவை சேர்ந்த அன்சிப் பெனாசிரிடம் இருந்து 621 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லெட் பெட்டிக்குள் அவர் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரையும் கைது செய்தனர். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 சம்பவங்களில் 1,553 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ₹49 லட்சம் ஆகும். இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன் 4 பயணிகளிடம் இருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.