யுஜிசி அறிவிப்பால் மீண்டும் குழப்பம் பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம்: அரசு மறுத்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியிடுவதா? பல கட்சிகள் கண்டனம்

* கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைபடி, 6ம் வகுப்பு முதல் 3வது மொழியாக இந்தி கட்டாயம் என்று அறிவித்தது பாஜ அரசு.

* தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது.

* இந்த நிலையில், பல்கலைக்கழக மானிய கமிஷன், மீண்டும் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

* கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம் என்றதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுடெல்லி, ஜூன் 26: பள்ளிகளைத் தொடர்ந்து, கல்லூரிகளில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்தியில், 2வது முறையாக பாஜக அரசு பதவி ஏற்றது. பதவி ஏற்றவுடன், ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை வகுக்க அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு, மத்திய அமைச்சரிடம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் 6ம் வகுப்பு முதல், 3வது மொழியாக இந்தி மொழியை கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மேலும்,  வருகிற 28ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் இந்தியை கட்டாயப்பாடமாக்கும் பொருள் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது.  இந்த தகவல் வெளியானதால், நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சில இடங்களில் போராட்டங்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் பல இடங்களில் கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டங்களையும்நடத்தினர்.

மேலும், இந்தி திணிப்பு கொள்கையை மத்திய அரசு கை விட வேண்டும் என்று கூறியுள்ளதோடு, மானியக்குழுவின் அறிக்கையை எரித்து போராட்டங்களை நடத்தினர். சென்னையில் சென்னை பல்லைக்கழக மாணவர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தி, சுற்றறிக்கையை எரித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பல இடங்களுக்கும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தாண்டு ஜூலையில் பல்கலைக் கழக மானிய குழு (யூஜிசி), நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் கடிதம் எழுதியது. இந்த கடிதத்தில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தியை சேர்ப்பது குறித்த சாத்தியக்கூறுகளை குறித்து ஆராயும்படி தெரிவித்து இருந்தது. இந்த சுற்றறிக்கையை யூஜிசி திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, இந்தியை கட்டாயமாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு நாடு முழுவதும் இளங்கலை பிரிவுகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழுத்தம் கொடுப்பது கவலை தருவதாக இருக்கிறது. யூஜிசி.யால் தன்னிச்சையாக இந்த சுற்றறிக்கையை அனுப்ப முடியாது. மொழி,  கலாசாரத்தில் இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. சட்டப்பூர்வமான, சரியான செயல்முறை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மொழியை திணிப்பதற்கான இந்த முயற்சியானது  பிற மொழியினரை தூண்டிவிடுவது போன்றதாகும். இளங்கலை பாடப்பிரிவுகளில் இந்தியை கட்டாயமாக்கும் யூஜிசி.யின் நடவடிக்கையானது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: