குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் உள்ள சாலையோர மரங்கள் மீது தனியார் நிறுவனத்தினர் ஆணி அடித்து தங்களது விளம்பர போர்டுகளை மாட்டி வைக்கின்றனர். இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை அழிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-கரூர் மாநில நெஞ்சாலையின் மையப்பகுதியில் குஜிலியம்பாறை அமைந்துள்ளது. குஜிலியம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பாளையம், டி.கூடலூர், கோவிலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் திண்டுக்கல், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக, சமூக நலனில் அக்கறையில்லாமல் வியாபார நோக்குடன் திண்டுக்கல்-கரூர் மாநில நெஞ்சாலையில் குஜிலியம்பாறை வழித்தடத்தில் உள்ள சாலையோர மரங்கள் மீது ஆணி மற்றும் இரும்பு போல்ட் ஆகியவை மூலம் துளையிட்டு தங்களின் நிறுவன விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். இதனால் மரங்களின் வளர்ச்சியில் பாதித்து பட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.