தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற தாய்

* ஆற்றில் புதைத்த காதலனிடம் விசாரணை

* வாலாஜாவில் பயங்கர சம்பவம்

வாலாஜா: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொலை செய்து, உடலை ஆற்றில் புதைத்துள்ளார். வேலூர் மாவட்டம், சிப்காட் வ.உ.சி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30) மேஸ்திரி. இவருக்கும் வாலாஜா அடுத்த வன்னிவேடை சேர்ந்த காவ்யா(25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது 4 வயது மகன் தருண். குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காவ்யா, கணவரை பிரிந்து குழந்தையுடன் வெளியேறி வாலாஜா, பெல்லியப்பா நகரில் வாடகை வீட்டில் வசித்துள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தருண் யுகேஜி படித்து வந்தான். அப்போது, காவ்யாவிற்கும், ராணிப்பேட்டை அடுத்த காரை பகுதியை சேர்ந்த தியாகராஜன்(30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரியவரவே ராமச்சந்திரன் காவ்யாவிடம் சென்று மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு வந்தார். ஆனால், காவ்யா, மறுத்து விட்டார்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி காவ்யாவிற்கும், தியாகராஜனுக்கும் இடையே, ராமச்சந்திரன் அடிக்கடி வந்து தகராறு செய்வது குறித்தும், குழந்தை தருண் குறித்தும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதையடுத்து இருவரும் சேர்ந்து குழந்தை தருணை, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர், பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தனர். தொடர்ந்து அன்றிரவு 2 மணியளவில் குழந்தையின் சடலத்தை ஆற்காடு டெல்லிகேட் அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனர். இதையடுத்து, மறுநாள் காலை காவ்யா ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு வந்த காவ்யாவின் அக்கா அஜந்தா, குழந்தை தருண் குறித்து கேட்டார். அதற்கு, காவ்யா முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.

தீவிரமாக விசாரிக்கவே, குழந்தையை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், வாலாஜா போலீசார் நேற்று முன்தினம் காவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தியாகராஜனுடன் சேர்ந்து குழந்தை தருணை கொலை செய்ததாக கூறி, புதைத்த இடத்தை போலீசாரிடம்  காவ்யா அடையாளம் காட்டினார். இதையடுத்து தருணின் சடலத்தை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். காவ்யாவை போலீசார் கைது செய்தனர். தியாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: