திருமலை: தமிழகம், கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் மதுக்கடைகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்பு மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார். அப்போது பெண்கள் மது விற்பனையால் தங்கள் கணவர்கள் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தையும் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் இதர பொருட்களையும் விற்று மது குடிப்பதாகவும், இதனால் உடல் ஆரோக்கியம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் இளைஞர்களும் மது அருந்தி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். இதனால் தனது தேர்தல் பிரசாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றபோது மாநிலம் முழுவதும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.