டெஹ்ரான்: அணு ஒப்பந்த்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி, யுரேனியத்தை அதிகளவில் செரிவூட்டி, அணு ஆயுத மூலப்பொருள் தயாரிக்கவுள்ளதாக ஈரான் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன் ரத்து செய்து பொருளாதார தடைகளை விதித்தார். இதையடுத்து ஓமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற 4 கப்பல்கள் மீது கடல் கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த வாரமும், ஜப்பான் கப்பல் உட்பட 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜப்பான் எண்ணெய் கப்பல் அருகே வெடிக்காத கண்ணிவெடிகளை ஈரான் படையினர் அகற்றி ஆதாரத்தை அழிக்க முயலும் வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட்டது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க் கப்பலும் தயார் நிலையில் உள்ளது.