திருச்சி தென்னூரில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை: ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்

திருச்சி: திருச்சி மாவட்டம் தென்னூர், பூமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். இவரது மகள் மலர்விழி மீரா(20) திருச்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இஇஇ படித்து வந்தார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். ராமகிருஷ்ணா பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரயில்வே தண்டவாளத்தை கடந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த வாலிபர், கத்தியால் மீராவின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த அப்பகுதியினர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து தில்லைநகர் போலீசில் ஒப்படைத்தனர். இதற்கிடையே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீராவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மீரா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `அய்யப்பன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் முரளி (34). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் முரளி, அடிக்கடி திருச்சி வந்து சென்றுள்ளார். அப்போது மீராவை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் அவர் கடுமையாக திட்டியுள்ளார். நேற்று மீராவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரத்தால் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்’ என்றனர்.

Related Stories: