புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார்’’ என அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மக்களைவ தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடந்த மாதம் 25ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். அவரது பதவி விலகலை செயற்குழு ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ராகுலை தனிப்பட்ட முறையில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும், ராகுல் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், மூத்த தலைவர்கள் குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி, அந்தோணி தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூனா கார்கே, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட முக்கிய குழுவில் இடம் பெற்றிந்தவர்கள்.