காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில்  6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு

காஷ்மீரில் கடந்தாண்டு ஜனவரியில் நாடோடிப் பழங்குடியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, கதுவா கிராமத்தில் உள்ள கோயிலில் மயக்க நிலையில் 4 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். பின் அவரை சிலர் கூட்டு பலாத்காரம் செய்து அடித்து கொன்றனர். அந்த சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரி 17ம் தேதி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை.

இந்த பலாத்கார கொலை தொடர்பாக, முக்கிய குற்றவாளியான, ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலரும் கிராம தலைவருமான சஞ்சி ராம், அவரது மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர் பர்வேஷ் குமார், வழக்கின் முக்கிய ஆதாரங்களை அழிக்க சஞ்சி ராமிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, காவலர் திலக் ராஜ், இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜுரியா மற்றும் சுரேந்தர் வர்மா உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிறுமி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 காவலர்களும் அடங்குவர்.  இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை வக்கீல்கள் சிலர் தடுத்ததால், இந்த வழக்கு ஜம்முவில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடந்து வந்தது.

6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ம் தேதி முடிவடைந்த நிலையில் பதன்கோட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டேஜ்வீந்தர் சிங் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் ஜம்மு-காஷ்மீர்: கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது.  மேலும் 6 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிற்பகல் 2 மணிக்கு தெரிவிக்கப்படும் என்றும் பதன்கோட் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

6 குற்றவாளிகளின் விவரம் :  

*முக்கிய குற்றவாளியான, ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலரும் கிராம தலைவருமான சஞ்சி ராம்,

*சஞ்சி ராம் அவர்களின் நண்பர் பர்வேஷ் குமார்,

*சஞ்சி ராமிடம் இருந்து ரூ 4 லட்சத்தை பெற்று கொண்டு ஆதாரங்களை அழித்த தலைமை காவலர் திலக் ராஜ்

*இவ்வழக்கின் மீது விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் எஸ்.ஐ ஆனந்த் தத்தா , இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தீபக் கஜுரியா மற்றும் சுரேந்தர் வர்மா

Related Stories: