புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் கட்டமாக, இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. டேராடூன் - இந்தூர் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி - இந்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், இந்தூர் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய பிரதான எக்ஸ்பிரஸ் ரயில்களும், இந்த 39 ரயில்களில் அடங்கும். ரயில்களில் மசாஜ் செய்யும் வசதி அடுத்த 15 முதல் 20 நாட்களில் அமலுக்கு வந்துவிடும். தலை, கால்களில் மசாஜ் செய்வதற்கு ரூ.100 முதல் ரூ. 300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் இந்த வசதி கிடைக்கும். ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 3 முதல் 5 மசாஜ் செய்பவர்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு ரயில்வே சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். கோல்டு, டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என்ற மூன்று வகையான பிரிவுகளில் மசாஜ் செய்யப்பட உள்ளது. இதற்காக தனித்தனி கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.