மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு மகளிர் பள்ளியில் கண்காணிப்பு கேமரா

தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் தெரசாள் உள்பட 118 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 160 ஆண்டு பழமையான இந்த பள்ளியில், 77 வகுப்பறைகள் உள்ளன. இப்பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பள்ளியின் வளாகத்தில் முக்கிய 4 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவலகம், பள்ளி அலுவலகக்கட்டிடத்தின் வெளிப்புறம், பள்ளியின் நுழைவாயில், மைதானம் ஆகிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பள்ளி முடிந்த பின்னர், தேவை இல்லாமல் வெளிநபர்கள் பள்ளிக்கு வருவது தடுக்கப்படும். இதுபோல் இண்டூர் பாலாவடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், முக்கிய 6 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும்பணி தீவிரமாக நடக்கிறது இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரசாள் கூறுகையில், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் நடவடிக்கைகளும் இதன்மூலம் கண்காணித்துக்கொள்ளலாம். வெளிநபர்கள் தேவையில்லாமல் வருவதை தடுக்கவும் இந்த கேமரா பயன்படுகிறது என்றார்.

Related Stories: