பெரும்பாக்கம் ஓட்டல் மேலாளர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

வேளச்சேரி: சென்னை பெரும்பாக்கத்தில்  ஓட்டல் மேலாளர் வீட்டில் 80 சவரன் தங்க நகையை  மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பிஸ்வாஸ்(40).  இவர் கிண்டியில் பிரபல தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் டெல்லிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற பிஸ்வாஸ், மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

 இதுதொடர்பாக பிஸ்வாஸ் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: