புதுடெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக நேற்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று மாலை இவருக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பூட்டான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல, பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சிறிசேனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.