குல்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பொதுமக்கள் இடையே நடைபெற்ற கடும் மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். குல்காமின் தாஸிபோரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டை நேற்று அதிகாலை தொடங்கியுள்ளது. இதில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு குண்டுவீசித் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இதிலிருந்து உடல்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த நிலையில், அப்பகுதி இளைஞர் ஒருவர், தீவிரவாதிகளை காப்பாற்றுவதற்காக பாதுகாப்பு படையினரின் தடுப்பு வளையத்தை தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, இந்தச் சண்டையை வீதிகளில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் திடீரென பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.