புதுடெல்லி: ஆண்டு வர்த்தகம் 1.5 கோடி வரை உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு இலவச ஜிஎஸ்டி சாப்ட்வேர் வழங்க தொடங்கியுள்ளதாக, ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிகளின்படி வியாபாரிகள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்வது, இன்வாய்ஸ் உள்ளிட்ட ஜிஎஸ்டி நடைமுறைகளில் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு உதவும் வகையில், ஜிஎஸ்டி சாப்ட்வேர் உருவாக்க ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. ஆண்டுக்கு ₹1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கு இந்த சாப்ட்வேரை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு விட்டது. பில் போடுவது, கணக்கீடு செய்வது, இருப்பு, சப்ளையர், விற்பனை, கேஷ் லெட்ஜர் போன்ற தகவல்களை பராமரிக்கவும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான படிவத்தை உருவாக்க புதிய சாப்ட்வேர் பயன்படும்.