திருப்பூரில் போலி ஆதார் அட்டைகளை வைத்திருந்த வங்க தேச இளைஞர்கள் 18 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் போலியான ஆதார் அட்டைகளோடு தங்கியிருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுபூலுவபட்டியில் உள்ள அத்திமரத்தோட்டம் என்ற இடத்தில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்யும் சிலரது நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 18 இளைஞர்களிடம் 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அந்த இளைஞர்கள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடம் விசா, பாஸ்போர்ட் போன்ற எந்த ஆவணங்களும் இல்லாததும் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் கள்ளத்தோணி மூலம் இந்திய வந்து கொல்கத்தாவில் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, பின்னர் திருப்பூருக்கு வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஏற்கனவே திருப்பூரில் ஆவணம் இல்லாமல் தங்கியிருந்த வங்காளதேச இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: